ஹஸ்பர் ஏ ஹலீம்
தங்களது பதவிக்காகவும், இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாயக நாட்டில் இல்லாதொழிக்கப் பட வேண்டும்.
தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிரபராதிகளையும் கட்சித்தலைவர்களையும் சிறைப்படுத்தி குற்றவாளியாக்க முனைவது எதிர்காலத்தில் ஒரு மோசமான அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப் படுத்தக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணக்கூடும் என நான் கவலைப்படுகிறேன் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று(14)விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ றிசாட் பதியுதீன் மீது கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தும் அவை அனைத்துக்கும் எதிராக உரிய விசாரணைகள் நடாத்தப் பட்ட போதும் குற்றப் புலனாய்வு திணைக்களமோ, பொலீஸ் திணைக்களமோ, ஆணைக்குழுக்களோ அவரை குற்றவாளியாக காணவில்லை.
அனைத்து விசாரணைகளுக்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிய அவர் முன்னாள் இராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மற்றும் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரால் புகழாரமும் சூட்டப்பட்டார்.
இவ்வாறான நிலையில் அவரையும் அவரது குடும்பத்தாரையும் வேண்டுமென்றே இன்னல்களுக்கு உள்ளாக்குவதும் அவர்களை கைது செய்ய முயற்சிப்பதும் ஒருவகை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும், விசாரணைகளுக்கும் பூரணமாக ஒத்துழைப்பை வழங்கி வரும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களையும் அவரது குடுப்பத்தாரையும் எந்த ஒரு அடிப்படையோ அல்லது குற்றச்சாட்டுகளோ நிருபிக்கப் படாமல் தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயத்தில் அரசாங்கம் நீதியான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.